Tuesday, March 1, 2011

கல்லின் பிரசவ சப்தம்!


விட்டு விட்டு வீசும்
தென்றலொன்று முகத்தில் அறைய..
கருங்குயில் ஒன்றின்
கீதம் காதை முத்தமிட...

இதோ..
உளியின் விளிம்பில்
செதுக்கப்படக் காத்திருக்கும்
சிற்பமொன்றின் பிம்பம்-
விழிகளின் உள்ளே!..

நடுங்கிப் போகிறது
நெஞ்சம்..

கல்லின் பிரசவ சப்தம்!!!

நன்றி.
முதற்சங்கு&எதிர்நீச்சல்

சிலாபம்!


கால்கள் சகதியில் சிக்கி
விழி பிதுங்கி நிற்கிறது-
கொக்கு ஒன்று!

இறக்கை அடிக்கும் ஓசைகள்
காற்றில் குறியீடுகளாக..!

அலகினை சகதியில் புதைத்து
கால் சிக்கலெடுத்து இறக்கை
விரிக்க முற்பட்டும்
மூச்சுக் குழாயின்
முக்கல்களும்..முனகல்களும்..!

பார்வையாளர்கள் உணரவில்லை..
கொக்கின் அவஸ்தை!

வந்த வரை லாபமென
கண்ணிப் போட்டு கடத்தும்
கூட்டமொன்று!..
இருக்கும் வரை யோகமென
கல் விட்டு எறியும்
கூட்டமொன்று!..

திடீரென..
குறியீடுகளின் திசை நோக்கி
அயல் தேச ராஜாளியொன்று
எச்சமிட்டுச் சென்றது.

கூட்டங்கள் கூட்டுக்குள் ஒடுங்கின.

நிலமெங்கும் நிர்மூலங்கள்
நீலம் பாவித்துக் கொண்டிருக்க..

கொக்கின் தொன்மங்கள்
எங்கோ ஒரு ஆழியில்
சிலாபம் செய்கிறது!!!

நன்றி..கீற்று.
இணையப் பத்திரிகை.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13269:2011-02-28-15-21-55&catid=2:poems&Itemid=265

Monday, January 24, 2011

இன்னுமிருக்கிறோம்..!

இலைகளின் இடுக்குகளில்
ஆவியாகும் வெப்பமாய்
கனவு!

நெளிந்து நழுவும்
மலை முகட்டுப் பாம்பாய்
காதல்!

இதோ...
உள்ளீடற்ற உருவமொன்றின்
உறுமல்கள் மறுசுழற்சி
செய்கிறது- கவிதையாய்!..

இன்னுமிருக்கிறோம்..
நானும் என் தனிமையும்...!!!!

நன்றி,
கீற்று.http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12595:2011-01-24-09-17-25&catid=2:poems&Itemid=265

Sunday, January 23, 2011

வலியொன்று..!

இலக்கியத்தில் இறங்காதே..
இறங்கினால்
இறக்கும் வரை உறங்காதே!
அவ்வப்போது
எழுகிறது..
மொழியென்றும் பழியென்றும்
சொல்ல இயலா வலியொன்று!...
*மணவை அமீன்*
நன்றி,
திண்ணை.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=311012315&format=html